பொய் புகார் - அரசுப்பள்ளி ஆசிரியரை 'டிஸ்மிஸ்' செய்து DEO உத்தரவு False Complaint: DEO Orders Dismissal of Government School Teacher
தேனியில் ஆசிரியர் மீது பொய்யான பாலியல் புகார் கூறி சிறை தண்டனை பெற்ற ஆசிரியை வனிதாவை 'டிஸ்மிஸ்' செய்து தொடக்க கல்வி டி.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் க. மயிலாடும்பாறை ஒன்றியம், நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2012 முதல் கணித பட்டதாரி ஆசிரியராக கோகிலபாண்டியன் பணிபுரிந்தார். அதே பள்ளியின் ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் கோகில பாண்டியன் மீது பாலியல் புகார் அளித்தனர். சத்துணவு அமைப்பாளர் நந்தினி பெயரில் காமன்கல்லுார் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், அப்போதைய டி.இ.ஓ., மொக்கத்துரை ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டு தயாரித்து, முன்னறிவிப்பு இன்றி கோகிலபாண்டியனை 'சஸ்பெண்ட்' செய்தனர்.
கோகிலபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவில் விசாகா கமிட்டி விசாரித்தது. அதில் முன்விரோதம் காரணமாக ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி பொய் குற்றச்சாட்டு சுமத்தியது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து வனிதா, ராமலட்சுமி, தலைமையாசிரியர் ரவிச்சந்திரன், டி.இ.ஓ., மொக்கதுரை உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக கோகில பாண்டியன் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2020ல் வழக்கு தொடர்ந்தார். தண்டனை பெற்ற ஆசிரியர்கள், அலுவலர்கள் இவ் வழக்கில் 2026 பிப்ரவரியில் டி.இ.ஓ., மொக்கதுரை, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் மற்றொரு டி.இ.ஓ., கணேஷ் என்பவருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம், டி.இ.ஓ., நேர்முக உதவியாளர் முனியாண்டி, பி.இ.ஓ.,க்கள் ஸ்ரீதேவி, ஹெலன்மெட்டில்டா ஆகியோருக்கும் தலா ஆறு மாத சிறை தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. கோகிலா பாண்டியனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இந்த வழக்கில் மொக்கதுரை, முனியாண்டி, ராமலட்சுமி, கணேசன் ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர். வீராச்சாமி விடுதலை செய்யப்பட்டார். தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் இறந்து விட்டார்.
தண்டனை பெற்ற அரசு ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என கோகில பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். விசாரணையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆறு வாரங்களுக்குள் சட்டத்திற்கு உட்பட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு ஜூன் 29ல் உயர்நீதிமன்ற மதுரை கிளை,தொடக்க கல்வி இயக்குநர், தேனி தொடக்க கல்வி டி.இ.ஓ.,விற்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ஆசிரியை வனிதாவை 'டிஸ்மிஸ்' செய்து தேனி தொடக்ககல்வி டி.இ.ஓ., நாகலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment