மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை புறக்கணித்த தலைமை ஆசிரியை: 3 ஆண்டு சிறை எச்சரிக்கை - தாசில்தார் நோட்டீஸ்!
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை புறக்கணித்த தலைமை ஆசிரியை: 3 ஆண்டு சிறை எச்சரிக்கை - அன்னூர் தாசில்தார் நோட்டீஸ்!
அன்னூர்: கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை ஏற்க மறுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியைக்கு, அன்னூர் தாசில்தார் ஜெயபாரதி சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பணி செய்ய தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு பணியும் சட்டப்பூர்வ கடமையும்
தற்போது நாடு முழுவதும் முதல்கட்டமாக வீடுகள் குறித்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில், அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட முடுக்கன்துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அமுதா என்பவருக்குத் தாசில்தார் அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
- மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- அரசு ஊழியர்கள் இக்கடமையை செய்ய வேண்டியது சட்டப்பூர்வமான பொறுப்பாகும்.
- கணக்கெடுப்பு பணி நியமன ஆணையைப் பெற்றுக்கொள்ள தகவல் தெரிவித்தும், தலைமை ஆசிரியை அதைப்பெறவில்லை; அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
- பணியை செய்ய மறுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்காக அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
"நோட்டீஸ் கிடைத்தவுடன் பணி ஏற்றுக்கொள்ளாததற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."
- அன்னூர் தாசில்தார் ஜெயபாரதி
ஆசிரியர் கூட்டணி விளக்கம் மற்றும் கோரிக்கை
இந்த விவகாரம் குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி செந்தில்குமார் அளித்த விளக்கத்தில்:
"குறிப்பிட்ட ஆசிரியை கடுமையான உடல்நலக் குறைபாடு காரணமாகத் தொடர்ந்து மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறார். வழக்கமாகத் தலைமை ஆசிரியர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் மேற்பார்வையாளராகவே (Supervisor) நியமிக்கப்படுவர். ஆனால், இவரை நேரடியாகக் கணக்கெடுப்பாளராக (Enumerator) நியமித்துள்ளனர். மேலும், பயிற்சி தொடங்குவதற்கு முன்பே அவருக்கு இதற்கான முறையான பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. எனவே, உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இத்தகைய கடினமான பணிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment